வெள்ளி, 24 அக்டோபர், 2014

சிங்களர்கள் தமிழ் கற்றுகொண்டு தமிழை இணைப்பு மொழியாக பயன்படுத்த கூடாதா..?

‘தமிழ் மக்கள் சிங்களம் கற்க வேண்டும்’ இந்தியத் துணைத்தூதுவரின் கருத்துக்கு விளக்கம் கோரப்படும்:
வடக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் சிங்களம் கற்க வேண்டும் என்று இலங்கைக்கான இந்தியாவின் துணைத்தூதுவர் எஸ்.டி.மூர்த்தி வெளியிட்ட கருத்து தொடர்பில் விளக்கம் கோரப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதகரத்தில் அண்மையில் இடம்பெற்ற ஹிந்தி மொழி தொடர்பிலான நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய துணைத் தூதுவர், “இந்தியாவில் வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள், ஹிந்தி மொழியை தொடர்பு மொழியாக பேச கற்றுக்கொண்டுள்ளனர். அதுபோல, வடக்கிலுள்ள தமிழ் மக்களும் சிங்கள மொழியை பேச கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
குறித்த கருத்து தொடர்பில் தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, “மொழி என்பது ஒரு நாட்டின் கொள்கை பிரச்சினை. அதில் தூதரக அதிகாரிகளின் தலையீடு இருக்கக் கூடாது. இது குறித்து இந்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், புதுடில்லியில் ஊடகவியலாளர்களிடம் நேற்று திங்கட்கிழமை பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “இந்த பிரச்சினை பற்றி இன்னும் எங்களுக்கு முழுமையான தகவல் கிடைக்கவில்லை. எனினும், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் துணைத் தூதர் எந்தக் கண்ணோட்டத்தில் அத்தகைய கருத்தை வெளியிட்டார் என்பது பற்றி விளக்கம் கேட்கப்படும்” என்றுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துரை வடிவ செய்தி